மீன் பிடிக்கும் உரிமை ஏலத்தில் முறைகேடு-பாமக
தேனி: தேனியில் மீன் பிடிக்கும் உரிமை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாமக சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள மீருசமுத்திர கண்மாயில் மீன் பிடிக்கும் உரிமைக்கு ஏலம் நடந்தது. இது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டரிடம், அம்மாவட்ட பாமக செயலாளர் சிங்ககுட்டி முருகன் என்பவர் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது, தேனி மாவட்டத்தில் உள்ள மீருசமுத்திரகண்மாய் மீன் பிடிக்கும் உரிமை ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் ஏலம் முறையாக நடக்கவில்லை. இதனால் இந்த ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கேஸ்வரன் என்பவர் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி பலரை மிரட்டி டெண்டரை வாபஸ் பெற வைத்துள்ளார். அவருக்கு பயந்து யாரும் முறையாக டெண்டர் கோரவில்லை. மேலும் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் பலர் கலந்து கொள்ளும் வகையில் ஏலம் நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.