மலேசியா-தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்: ஜெ
சென்னை: மலேசியாவை பொன் கொழிக்கும் நாடாக ஆக்கியவர்கள் தமிழர்கள் தான் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அங்கு போலீசாரால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மலேசியாவின் செல்வ நிலையை உயர்த்திய தமிழர்கள் தங்களுக்கு கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளில் சம நீதியும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்று இங்கிலாந்து தூதரகம் முன்பாக பேரணி நடத்தி மனு கொடுக்க சென்றபோது அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக மலேசிய அரசின் காவல்துறை தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தென் ஆப்பிரிக்கா, பர்மா, மொரீஷியஸ், நியுசிலாந்து, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உடல் உழைப்பினை பெறுவதற்காக தமிழர்கள் அங்கு கொண்டு சென்று கொத்தடிமைகளாக இறக்கப்பட்டனர்.
கரும்பு தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், மலேசியாவில் ரப்பர் தோட்டங்களிலும், ஈயம் மற்றும் தகரம் வெட்டும் சுரங்கங்களிலும் கடுமையாக உழைத்தனர் தமிழர்கள். மலேசியாவை அவர்கள் தான் பொன் கொழிக்கும் நாடாக ஆக்கினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அப்படிப்பட்ட மலேசிய தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் அங்கு மூன்றாம் தர குடிமகன்களாக வாழ்கின்றனர் என்பதும் கவலை அளிக்கிறது.
இங்கிருந்து கூலிகளாக சென்றபோது அவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்ததோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறது என்றும் அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது என்றும், 150 ஆண்டுகளுக்கும் மேலான நூற்றுக்கணக்கான பாரம்பரிய வழிபாட்டுத்தலங்கள் இடித்து அழிக்கப்பட்டன என்றும் இதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுவது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.
தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு பேரணி நடத்த முடிவு செய்த தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதும், ரசாயன கலவை கலந்த நீரை அவர்கள் மீது பீய்ச்சி அடித்து இருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த தாக்குதலில் காயமடைந்த 200 பேருக்கு சிகிச்சை அளிக்கக் கூட மலேசிய போலீசார் அனுமதிக்காதது காமன்வெல்த் நாடுகளின் விதியின்படி மாபெரும் குற்றமாக கருதப்படும். இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியதாகும்.
அங்குள்ள தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுத்து முதலாம் குடிமகன்களாக அவர்களை உயர்த்தவும், தாக்குதலுக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும் மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications