சிறுதாவூர் பங்களாவில் ஜெ. ஓய்வு
மாமல்லபுரம்: அதிமுக பொதுச் செயலாளர் தனது சிறுதாவூர் பங்களாவில் ஓய்வுக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஷிப்ட் முறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவ்வப்போது ஜெயலலிதா சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுக்கச் செல்வார். அதே போல் நேற்றிரவு சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து தனது சொந்த காரில் புறப்பட்டு சென்றார்.
ஜெயலலிதா காரின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக போலீசார் சென்றனர். சிறுதாவூர் பங்களாவில் தங்கியிருக்கும் ஜெயலலிதா வரும் ஜனவரி மாதம் வரை அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
சமீப காலமாக அவரது போயஸ் தோட்ட வீட்டுக்கு பல்வேறு மர்ம நபர்கள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
தற்போது சிறுதாவூருக்குச் சென்றிருக்கும் ஜெயலலிதாவுக்கு, அங்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்களாவைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதா சிறுதாவூரில் தங்கியிருக்கும் வரை காஞ்சீபுர மாவட்ட அதிரடிப்படை போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாவலுக்கு இருப்பார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு அவருக்கு குண்டு துளைக்காத காரை கொடுத்திருந்தாலும் அவர் அதை பயன்படுத்தாமல் சொந்த காரிலேயே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications