கணவர் குடும்பத்தாரை தூக்கில் போட வேண்டும்-ஜெனிதா

திருச்சியை சேர்ந்த ஜெனிட்டாவை அமெரிக்காவில் இன்போஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அவருடைய கணவர் கிரிஸ்டி சேவியர் டேனியஸ் மற்றும் குடும்பத்தினர் காரில் இருந்து தள்ளி கொல்ல முயன்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்து அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் பாரஸ்ட் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிதாவை அவரது பெற்றோர் சென்று சென்னை அழைத்து வந்துள்ளனர்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நினைவு திரும்பிய ஜெனிதாவை அவருடைய பெற்றோர்கள் திருச்சிக்கு அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது ஓரளவு உடல்நிலை தேறியுள்ள ஜெனிதா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் இருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளுமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்னர் ஜெனிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருமணம் நடந்ததில் இருந்தே கணவன் குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். பிரச்சனைகளை சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் எனது கணவர் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றேன்.
அமெரிக்காவில் கிரீன்வீல்ஸ் என்ற இடத்தில் காரில் செல்லும் போது எனது மாமியார் செல்லம், மாமனார் சேவியர் ஆகியோர் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். எனது கணவர் தான் காரை ஓட்டி வந்தார்.
காரில் ஏறியதிலிருந்தே என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு வந்த மாமியார் செல்லம், நான் எதிர்பார்க்காத போது திடீரென்று கார் கதவை திறந்து கீழே தள்ளிவிட்டார்.
அதன்பின்னர் 2 மாதங்கள் கழித்து தான் எனக்கு நினைவு திரும்பியுள்ளது. என்னுடைய பெற்றோரின் துணையாலும், கடவுளின் அருளாலும் தான் நான் மீண்டும் உயிர் பிழைத்துள்ளேன்.
என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கணவன் குடும்பத்தாரை கடுமையாக தண்டித்து அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றார் ஜெனிதா.












Click it and Unblock the Notifications