உபி குண்டுவெடிப்பை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்
சென்னை: உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 23ம் தேதி பைசாபாத், லக்னெள மற்றும் வாரணாசியில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் பைசாபாத், லக்னெள ஆகிய இடங்களில் நீதிமன்ற வளாகங்களுக்குள் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
நீதிமன்றங்களில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பைக் கண்டித்து நாளை வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பார் கவுன்சில் சங்கத் தலைவர் சந்திரமோகன் கூறியதாவது,
வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால் கனகராஜ், இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
நாளை நடக்கவுள்ள வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கும் எனத் தெரிகிறது.