குறை சொல்லி ராமதாஸ்-அமைச்சர் தாக்கு
சென்னை: பொழுது விடிந்து விட்டால் பாமக நிறுவனர் ராமதாசுக்கு யாரைப் பற்றியாவது குறை கூறாவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிதம்பரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் பற்றி பேசியிருக்கிறார். அப்போது தமிழகத்தை ஆளுகிறவர்களும், ஆண்டவர்களும் ஒன்றாக கூட்டு சேர்ந்துள்ளனர் என்று பேசியிருக்கிறார்.
ராமதாசுக்கு அன்றாடம் பொழுது விடிந்தால் யாரைப் பற்றியாவது குறை கூறாவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, அந்தப் பிரச்சனையில் சுமூக முடிவெடுக்க மாணவர்களை முதல்வர் கருணாநிதி சந்தித்து பேசினார்.
அப்போது மத்திய அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவதாகவும், உண்ணாவிரதத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மாணவர்களின் போராட்டத்தை நிறுத்த முதல்வர் வழிவகுத்தாரே தவிர அந்த மாணவர்களை தூண்டிவிடவில்லை. மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை குறித்து தான் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாக முதல்வர் தெரிவித்தார்.
மேலும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஏதோ கையெழுத்து போட்டு கொடுத்ததாகவும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். அப்படி நானோ அல்லது எனக்கு முன்பிருந்த சாத்தூர் ராமச்சந்திரனோ எந்தக் கையெழுத்தும் போட்டுக் கொடுக்கவில்லை.
ஆனால் இந்த திட்டத்தை எதிர்க்க ஆளுகிறவர்களும், ஆண்டவர்களும் கூட்டு சேர்ந்திருப்பதாக ராமதாஸ் பேசியிருப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு கூறும் கற்பனை என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications