பாமக பிரமுகர் மகனை அடித்த போலீஸ் - காவல் நிலையம் முற்றுகை
சென்னை: பாமக பிரமுகரின் மகனை போலீஸார் அடித்ததைக் கண்டித்து சென்னை கிண்டி காவல் நிலையத்தை பெரும் திரளான பாமகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் ேசர்ந்த ஒரு பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இருவரது பெற்றோரும் இந்த காதலுக்கு வில்லனாக மாறினர்.
இதையடுத்து நண்பர்களின் துணையுடன், ரமேஷ் தனது காதலியுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார்.
இதையடுத்து அந்தப் பெண்ணின் தந்தை கிண்டி காவல் நிலையத்தில் தனது மகளை ரமேஷ் கடத்தி விட்டதாக புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். ரமேஷின் நண்பர்களில் ஒருவரான டாக்சி டிரைவர் லோகேஷ் என்பவரை பிடித்துச் சென்று அடித்து உதைத்ததாக தெரிகிறது.
லோகேஷ் பாமக கொள்கைப் பிரச்சார அணியின் செயலாளர் பஞ்சாட்சரத்தின் மகன் ஆவார். போலீஸாரின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பஞ்சாட்சரம், தனது கட்சித் தொண்டர்களோடு கிண்டி காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று முற்றுகைப் போராட்டத்தில் இறங்கினார்.
போலீஸாரைக் கண்டித்து அனைவரும் கூச்சலிட்டனர். பாமக துணைப் பொதுச் செயலாளர் சிவாீ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன், கவுன்சிலர்கள் பிரேமா, வெங்கடேசன், மணிவண்ணன் ஆகியோர் காவல் நிலையம் முன்பு ஆவேசமாக கோஷமிட்டனர்.
தகவல் அறிந்துதம் சைதாப்பேட்டை உதவி ஆணையர் ஜெயராஜ் விரைந்து வந்து பாமகவினரை அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். போலீஸாரால் தாக்கப்பட்ட லோகேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications