For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15,000 ரவுடிகளுக்கு குறி - தர வாரியாக பிரித்து கைது

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களை தரம் பிரித்து போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதுதொடர்பாக முதல் முறையாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களுடன், டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி ரவுடி வேட்டை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. குறிப்பாக திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன், செங்கல்பட்டில் இரண்டு அதிமுக பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டது ஆகியவை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி விட்டது.

இதையடுத்து தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடி வரும் கூலிப் படையினர், ரவுடிகள், பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளவர்கள், பழைய குற்றவாளிகள் ஆகியோரை வேட்டையாடுமாறு காவல்துறைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ரவுடிகள் வேட்டை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சென்னை ரவுடிகள் மட்டும் 2500 பேர்.

ரவுடிகள் தரம் பிரிப்பு:

ரவுடிகளை போலீஸார் தரம் பிரித்துள்ளனர். அதாவது கூலிப் படையினராக செயல்படுவோரை ஏ பிளஸ் ரக ரவுடிகளாக தரம் பிரித்துள்ளனர். கொலை செய்வது, மாமூல் வசூலிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஏ கிளாஸ் ரவுடிகள். இதுபோல பி, சி, டி என மொத்தம் ஐந்து வகையினராக ரவுடிகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் உள்ள ரவுடிகளை போலீஸார் வளைத்து வளைத்துக் கைது செய்து வருகின்றனர். இதுவரை மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் போலீஸ் வேட்டைக்குப் பயந்து தப்பி விட்டனர். அவர்களையும் பிடிக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை:

இந்த நிலையில் ரவுடிகள் வேட்டையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அது தொடர்பான ஆலோசனைகள் தொடர்பாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களுடன், டிஜிபி ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி விஜயக்குமார் ஆகியோர் முதன் முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

மாநில டிஜிபி அலுவலக கூட்ட அரங்கிலிருந்து இந்த வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை நடந்தது. அனைத்து மாவட்ட எஸ்.பிக்களையும் டிஜிபி தொடர்பு கொண்டு ரவுடிகள் வேட்டை குறித்து விசாரித்தார். பல ஆலோசனைகளையும் வழங்கினார்.

அதேபோல சரக டிஐஜிக்களுடனும் டிஜிபி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தமிழக காவல்துறை அதிகாரிகளுடன், டிஜிபி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பேசியது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவுடிகள் வேட்டையில் கண்காணிப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில் சென்னைக்கு அழைத்துப் பேசுவதை விட வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுவது என்ற முடிவெடுக்கப்பட்டு அதன்படி இந்த வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை நடத்தப்பட்டது.

எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்:

இதற்கிடையே, பல்வேறு எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை மாநில உள்துறைச் செயலாளர் மாலதி பிறப்பித்துள்ளார்.

சிபிசிஐடி (1) எஸ்.பி முத்துச்சாமி, அரியலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். சிபிசிஐடி (2) எஸ்.பி. பவானீஸ்வரி மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவை தலைமையிட துணை ஆணையர் கருப்பசாமி, சென்னை பூக்கடைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்பிரிவில் இதுவரை இருந்து வந்த பாஸ்கரன், பொருளாதார குற்றப் பிரிவு தலைமயிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பியாக இருந்து வந்த சின்னச்சாமி சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மது விலக்கு கூடுதல் துணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, கோவோ தலைமையிட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மது விலக்குப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் மனோகரன், மத்திய சென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X