ஜிப்மரில் பெண் கொலை-மருத்துவமனையில் ஊழியர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் தாயாரைக் கொன்று அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை திருடிய கொடூர ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி, வீமக்கவுண்டன் பாளையம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் சீனுவாசனின் மனைவி மரகதம்மாள்(65). இவர்களது மகள் அன்னபூரணிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஜிப்மரில் சேர்க்கப்பட்டார்.
மகளுக்குத் துணையாக மரகதம்மாள் மருத்துவமனையில் தங்கியிருந்தார். இந் நிலையில் கடந்த 21-ந்தேதி இரவு 9 மணியளவில் வெளியே போன மரகதம்மாள் திரும்ப வரவில்லை. இதனால் சீனுவாசன், கோரிமேடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந் நிலையில் நேற்று மருத்துவமனையின் ஒரு பகுதியில் உள்ள பழுதடைந்து கிடக்கும் லிப்ட்டுக்கு அருகே மரகதம்மாள் பிணமாக, அழுகிய நிலையில் கிடந்தார். அவரது முகத்தில் பாலிதீன் பை கட்டப்பட்டிருந்தது.
அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, 3 பவுன் வளையல், 1 பவுன் தோடு ஆகியவை களவு போயிருந்தன. இதையடுத்து நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், ஜிப்மரில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்க்கும் ரமேஷ் (28) என்பவர் மரகதம்மாளிடம் அடிக்கடி பேச்சு கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து ரமேஷை போலீஸார் உரிய முறையில் விசாரித்தனர். அப்போது அவர் உண்மையைக் கக்கினார். நகைக்காக தான்தான் மரகதம்மாளை, ஆசை படத்தில் வருவது போல முகத்தில் பாலிதீன் பையால் மூடி மூச்சுத் திணறடித்துக் கொன்றதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 21ம் தேதி மரகதம்மாள் கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு அடுத்த நாள் வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார் ரமேஷ். ஆனால் கொலை செய்தது தெரிந்து விடுமோ என்ற பயம் வந்ததால் இதையடுத்து 3 நாட்கள் வேலைக்கு வராமல் லீவு எடுத்து சொந்த ஊரான கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்துக்குப் போய் விட்டார். பின்னர் 26ம் தேதி முதல் வேலைக்கு வர ஆரம்பித்தார்.
மருத்துவமனை வளாகத்திலேயே பெண்ணைக் கொலை செய்து நகையைப் பறித்த மருத்துவமனை ஊழியரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.