வெடி மருந்து கடத்த முயன்ற வாலிபர், இலங்கை மீனவர் கைது
திருநெல்வேலி: இலங்கைக்கு வெடி மருந்து கடத்த முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக லாரியில் வெடிமருந்துகளுடன் ஒரு கும்பல் வேதாளை என்ற இடத்தில் பதுங்கியுள்ளதாக ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசாருக்கு கடந்த 18ம் தேதியன்று இரவு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து கியூ பிரிவு போலீசார் அப்பகுதிக்கு சென்றபோது லாரியை விட்டு கும்பல் தப்பியோடியது. போலீசார் லாரியை கைப்பற்றி தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந் நிலையில் மூன்று தினங்களுக்கு முன் இந்த வெடி மருந்து கடத்தலில் தொடர்புடைய நேதாஜி என்பவரை பரமக்குடியில் வைத்து போலீசார் வளைத்தனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரான டென்னிஸ்டன் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதும், அவர் தற்போது கழுகுமலையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கழுகுமலைக்கு விரைந்தனர். டென்னிஸ்டன் தங்கியிருந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அந்த வீடு ஒரு ஆசிரியைக்கு சொந்தமானதாகும். அவரது வீட்டில் பதுங்கியிருந்த டென்னிஸ்டன் பாலபத்திராமபுரத்திற்கு சென்றிருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து நேற்றிரவு பாலபத்திராமபுரத்தில் டென்னிஸ்டனை போலீசார் கைது செய்து விசாரணைக்காக ராமேஸ்வரத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து வெடி மருந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications