மலேசிய தமிழ் தலைவர் மீண்டும் கைது
கோலாலம்பூர்: மலேசிய அரசின் பாரபட்சப் போக்கைக் கண்டித்து போர்க்கொடி உயர்த்தியுள்ள இந்து உரிமை நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வி.கணபதி ராவ் இன்று கைது செய்யப்பட்டார்.
மலேசிய அரசு தங்களை 2ம் தர குடிமக்களாக நடத்துவதைக் கண்டித்தும், கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை தரக் கோரியும், இந்த நிலைக்குக் காரணமான இங்கிலாந்து அரசைக் கண்டித்தும் இங்கிலாந்து தூதரகத்தில் மனு கொடுக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான தமிழர்கள் தலைநகர் கோலாலம்பூரில் திரண்டனர்.
மலேசியா கடந்த 10 ஆண்டுகளில் காணாத அளவுக்கு பெரும் திரளாக கூடிய தமிழர்கள் மீது போலீஸார் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர்.
240 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஹிண்ட்ராப் அமைப்பின் முக்கியத் தலைவர்களான உதயகுமார், வாய்த மூர்த்தி, கணபதி ராவ் ஆகியோரும் அடக்கம்.
ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு சரியில்லை என்று கூறி 3 பேரையும் விடுதலை செய்ய கிளாங் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் விடுதலையாகினர்.
இந்த நிலையில் கணபதி ராவை கோலாலம்பூர் போலீஸார் இன்று மீண்டும் கைது செய்துள்ளனர். அவரது அலுவலகத்தில் வைத்து ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 88 தமிழர்கள் மீது மலேசிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். கணபதி ராவ் கைது செய்யப்பட்டுள்ளால் மலேசிய தமிழர்கள் மற்றும் இந்தியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.