கோவில் நகைகளைத் திருடிய பூசாரி கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில், கோவில் நகைகளை திருடிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அடுத்த பேயன்குழியில் முத்தாரம்மன் கோலில் உள்ளது. இந்த கோவிலில் ராஜன் (35) என்பவர் பூசாரியாக உள்ளார்.
இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த மற்றும் கோவில் வருமானத்தில் செய்த நகைகள் என சுமார் 25 பவுன் நகைகள் உள்ளது.
கோவில் நகைகளை பெட்டியில் பூட்டி வைக்கும் சாவியும், உண்டியல் சாவியும் பூசாரி ராஜனிடமே இருந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் நிர்வாகத்தினர் உண்டியலை திறந்து பார்த்த போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை மிக குறைவாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பூசாரி ராஜனை அழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கோவில் நிர்வாகத்தினர் சாமி நகைகளை சரி பார்த்தனர். அப்போது ஒரிஜினல் நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் இருந்தது கண்டு நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், பூசாரி தலைமறைவு ஆகிவிட்டார். இது குறித்து ஊர் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பூசாரியையும், அவரது மனைவியையும் தேடி வந்தனர். இதில் பூசாரி சிக்கினார்.
அவரிடமிருந்து திருட்டுப் போன கோவில் நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications