மருத்துவ மாணவர்களுக்கு திருமா. ஆதரவு
கும்பகோணம்: மருத்துவவ மாணவர்கள் நடத்தும் போராட்டம் நியாயமானதுதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நெல் குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 வழங்க கேட்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஆதரிக்கிறது.
இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர், மாவட்ட தலைநகரங்களில் வரும் 10ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும். தஞ்சையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்வேன்.
மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் நியாயமானதுதான். கிராமப்புற சேவையை அவர்கள் எதிர்க்கவில்ல. படிப்பு காலத்தை 6 ஆண்டுகள் நீடித்திருப்பதை எதிர்க்கிறார்கள். கால நீட்டிப்பு தேவை இல்லாதது என்பதால் அந்த முடிவை கைவிட்டு 5 ஆண்டிற்குள் கிராமப்புற சேவையை செயல் படுத்துவது ஏற்புடையதாக இருக்கும்.
பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் சொல்வது போல இந்த பிரச்சனையில் அரசியல் ஆக்கும் தோற்றம் இருப்பதாக கருத முடியாது. இதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாத அமைப்புகளை கண்காணிக்க காவல்துறையில் கியூபிராஞ்ச் பிரிவு இருப்பது போல ஜாதி, மத கலவரம் ஏற்பட காரணமானவர்களையும், கூலிப்படையினரையும், கண்காணிக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
டிசம்பர் 6ம் தேதி சித்தூர் அருகே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டப்போவதாக அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசு தலையிட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் படித்த 25,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் கடந்த 20 வருடங்களாக வேலை வழங்கப்படவில்லை. வரும் ஜனவரி 25ம் தேதி மொழிப் போர் வீரவணக்க நாளன்று சென்னையில் எனது தலைமையில் பட்டதாரி தமிழாசிரியர்களுக்கு வேலை வழங்க கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடக்கும்.
அதே போல் உடற்கல்வி துறையில் காலியாக இருக்கும் 1,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சேலம் சந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலுக்குள் அனைத்து சமுதாயத்தினரும் செல்லலாம் என்ற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
மலேசிய வாழ் தமிழர்கள் பிரச்சனையில் அந்நாட்டு அமைச்சரின் கருத்து ஏற்புடையதல்ல, மலேசிய தமிழர்களுக்காக முதல்வர் கருணாநிதி குரல் கொடுக்கக் கூடாது என்று மலேசிய அமைச்சர் பேசியிருப்பது பாசிச போக்காகும்.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். அவர்களை மீட்பதில் தொண்டு நிறுவனங்கள் அக்கரை காட்டுமளவுக்கு மத்திய அரசு காட்டுவதில்லை.
உலக நாடுகளின் அமைதிக்காக போராடியவர் இறக்கும்போது அஞ்சலி செலுத்துவது கூட தவறு என்றால் அது மனித நேயத்திற்கு முரணாகும்.
விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து டிசம்பர் 2ம் தேதி நடக்கும் உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications