8 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: 8 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாகவும், இன்று முதல் வகுப்புகளுக்குத் திரும்புவதாகவும் அறிவித்துள்ளனர். மற்ற 6 கல்லூரிகளின் மாணவர்கள் இன்று பிற்பகல் தங்களது முடிவை அறிவிக்கவுள்ளனர்.
கட்டாய கிராமப்புற சேவை, மருத்துவப் படிப்பை ஆறரை ஆண்டுளாக உயர்த்துவது ஆகியவற்றை எதிர்த்து தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மாணவர்கள் அமலுக்கு வராத ஒரு உத்தரவை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது தேவையற்றது, இதுகுறித்து சிந்தித்துப் பார்த்து வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், நேற்றைக்குள் வகுப்புகளுக்குத் திரும்பாவிட்டால் கல்லூரிகள் மூடப்படும், விடுதிகளும் மூடப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்திருந்தது. அதன்படி நேற்று காலை அனைத்துக் கல்லூரிகளின் விடுதிகளும் மூடப்பட்டன. மின் இணைப்புகள், குடிநீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டன. கல்லூரிகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர் பிரதிநிதிகளை அழைத்து சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்தில் வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் 14 அரசுக் கல்லூரிகளின் மாணவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அனைத்துக் கல்லூரி மாணவர் சங்கப் பிரதிநிதிகளும் தீவிர ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, செங்கல்பட்டு, சேலம், தேனி ஆகிய 8 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். மேலும், இன்று காலை முதல் வகுப்புகளுக்குத் திரும்புவதாகவும் அறிவித்தனர்.
இதேபோல பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பும் பணிக்குத் திரும்புவதாக இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
4 கல்லூரிகளில் போராட்டம் தொடர்கிறது:
சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, நெல்லை மருத்துவக் கல்லூரி மற்றும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தான் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications