மலேசிய பிரச்சினையில் தலையிட மத்திய அரசுக்கு பாமக கோரிக்கை
கடலூர்: மலேசிய தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமைகளைப் பெற்றுத் தர உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
பாமக நிலைக்குழுக் கூட்டம் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மலேசியத் தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதற்கும், தமிழர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, 2ம் தர குடிமக்களாக இன்னலுக்கு ஆளாகி வருவதாக கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் மனித உரிமை மீறல்களை இந்திய அரசும், உலக சமுதாயமும் கண்டும் காணாமலும் இருந்து வரும் போக்கின் காரணமாகவே, மலேசியத் தமிழர்கள் இன்று ஒடுக்கப்பட்டு, அடக்கப்படும் நிலை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம்.
மலேசியத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு, தமிழர்களின் உரிமைகளையும், கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்புகளையும் பெற்றுத் தர வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்னொரு தீர்மானத்தில், தமிழகத்தில் நிலவும் மிக மோசமான மின் வெட்டை சரி செய்ய, பிற மாநிலங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்று விநியோகிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டது. மேலும் மின்சார நிலைமை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருந்து.
இதுதவிர, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்யப்பட வேண்டும், சிமென்ட்டை உடனடியாக இறக்குமதி செய்து பற்றாக்குறையைப் போக்க வேண்டும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக விளைநிலங்களையும், மக்கள் குடியிருக்கும் பகுதிகளையும் கையகப்படுத்தக் கூடாது, தேயிலை மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும், 6 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என தமிழக மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications