பாபர் மசூதி விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளி
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு விவகாரம் இன்று நாடாளுமன்றத்தை உலுக்கியது. இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 15வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.
இன்று காலை சபை தொடங்கியதுமே சமாஜ்வாடிக் கட்சி உறுப்பினர்கள் எழுந்து, பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பதில் அரசு தாமதம் காட்டுவதாக குற்றம் சாட்டிப் பேசினர்.
மேலும் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி அவர்கள் பாஜகவுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. சமாஜ்வாடி உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினரும் கோஷமிட்டனர்.
ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று கூறிய பாஜகவினர், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டதால் அவையில் பரபரப்பு நிலவியது.
இதனால் முதலில் அவையை பிற்பகல் 12 மணி வரைக்கும் சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் கூச்சல் குறையவில்லை. இதனால் 2 மணி வரைக்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
அயோத்தியில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று நடந்த நிகழ்வுகளுக்கு பாஜகவே காரணம் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் குற்றம் சாட்டிப் பேசியதால் அவையில் இன்று முழுவதும் பெரும் கூச்சல் நிலவியது.
ராஜ்யசபாவிலும் அமளி:
இதேபோல ராஜ்யசபாவிலும் இன்று பெரும் அமளி நிலவியது. பாபர் மசூதியை இடித்தவர்களைத தண்டிக்க வேண்டும் என்று சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங் தலைமையில் அக்கட்சி எம்.பிக்கள் கோஷமிட்டனர்.
சபைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் இருக்கை முன்பு கூடிய சமாஜ்வாடிக் கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும்.
பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்களைக் கைது செய்யாமல் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்து செயல்பட்டு வருகின்றன என்று கூறி கோஷமிட்டனர்.
இதனால் முதலில் 12 மணி வரைக்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணி வரைக்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications