காந்தி சிலை அருகே 'கட்டிங்' விற்பனை - டாஸ்மாக் கடைக்கு பூட்டு
ஏரல்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில், காந்தி சிலை அருகே டாஸ்மாக் கடையில், விதிமுறைக்குப் புறம்பாக கட்டிங் விற்றதைத் தொடர்ந்து அந்தக் கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் அருகே மதுக் கடைகளை வைக்கப்படாது என்று அரசு கூறுகிறது. ஆனால் மகாத்மா காந்தியின் சிலை அருகே ஒரு மதுக் கடை வைக்கப்பட்டு படு ஜோராக விற்பனையும் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாட்டம் ஏரலில்தான் இந்தக் கொடுமை. ஏரலில் உள்ள காந்தி சிலை எதிரே ஒரு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. ஊரின் மையப் பகுதியில் உள்ள கடை என்பதால் இங்கு எப்போதும் திருவிழாக் கூட்டம்தான்.
தேசத் தந்தையின் சிலையைப் பார்த்தவாறு தாக சாந்தி செய்து வந்தனர் குடிமக்கள். இந்த நிலையில் இக்கடையில் விதிகளுக்குப் புறம்பாக கட்டிங் விற்பதாகவும், மேலும் பல முறைகேடுகள் நடப்பதாகவும் டாஸ்மாக் அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சந்திரசேகரன் தலைமையில் அதிகாரிகள் ஏரல் காந்தி சிலை, பஸ் ஸ்டாண்ட், சிறுதொண்டநல்லூர் டாஸ்மாக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது காந்தி சிலை டாஸ்மாக் கடையில் கட்டிங் விற்பது, அதிக விலை மதுபானங்களில் குறைந்தவிலை மதுபானங்களை கலந்து விற்பது உள்ளிட்ட செயல்களில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்து பூட்டினர்.
மேலும் சிறுதொண்டநல்லூரில் உள்ள கடையிலும் கட்டிங் உள்ளிட்ட முறைகேடான செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications