31 தமிழர்களுக்கு ஜாமீன் வழங்க மலேசிய நீதிமன்றம் மறுப்பு
கோலாலம்பூர்: கோலாலம்பூர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 31 தமிழர்கக்கும் அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
நவம்பர் 25ம் தேதி தலைநகர் கோலாலம்பூரில், அமைதியான முறையில் ஊர்வலமாக சென்ற 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் மீது மலேசிய போலீஸார் மிகக் கொடுமையான முறையில் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் 31 பேரை மட்டும் போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போலீஸ் அதிகாரியைத் தாக்கிக் கொல்ல முயன்றதாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தமிழர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன வெறியுடன் மலேசிய அரசு நடந்து கொள்வதையே இது காட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று இந்த வழக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 31 தமிழர்கள் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான விவாதத்தின்போது, அரசுத் தரப்பு குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் அதை மறுத்து தமிழர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன் வாதாடினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆதாரம் இல்லை, இது பொய்யான வழக்கு என்று வாதாடினால் அதுகுறித்த ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இன்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஷா அஸ்லாம் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி அசிமா ஒமர் ஜாமீன் குறித்த தனது முடிவை 20 நிமிடங்கள் வாசித்தார்.
அவர் கூறியதாவது,
கைது செய்யப்பட்ட 31 பேர் மீதும் செக்ஷன் 307ன் படி கொலை முயற்சி வழக்கு மற்றும் ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஜாமீன் கொடுத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீதான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஈடுபட்ட செயல் சட்டப்படி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்ததால் குற்றம் தான்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 3 பேர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் நோய் குறித்து சரியாக மெடிக்கல் ரிப்போர்ட் கொடுக்கப்படாததால் அவர்களுக்கும் ஜாமீன் வழங்க இயலாது.
சட்டத்திற்கு புறம்பாக போராட்டம் நடத்திய இவர்கள் மீதான வழக்கை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாததால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க இயலாது என்றார் நீதிபதி.
வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களால் வெளியே வர முடியாது என்பதால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications