அரசு அலுவலகங்களில் திருட்டு விசிடி விற்பனை
சென்னை: சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சில அரசு அலுவலகங்களில் திருட்டு விசிடி, டிவிடிக்கள் படு சுதந்திரமாக புழங்கி வருகின்றன. திருட்டு விசிடிக்காரர்கள் கடை விரித்து விற்பனை செய்கின்றனர். அதேசமயம், பல அரசு ஊழியர்கள் திருட்டு விசிடிக்கள், டிவிடிக்களை வாடகைக்கு விட்டு வசூல் பார்க்கின்றனர்.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின்போது திருட்டு விசிடி, டிவிடி விற்பனைக்கு எதிராக சட்டம கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பு தெருத் தெருவாக, வீதி வீதியாக திருட்டு விசிடி விற்பனை கொடி கட்டிப் பறந்தது.
ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்குப் பின்னர் இந்த நிலை மாறியது. திருட்டு விசிடி விற்றதாக கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளப்பட்டனர். முன்பு போல பகிரங்கமாக விற்பனை நடைபெறுவது தடைபட்டது.
சமீப காலமாக மறுபடியும் திருட்டு விசிடி, டிவிடி விற்பனை கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது. புதிய படங்கள் உடனுக்குடன் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. பகிரங்கமாக விற்காவிட்டாலும் கூட சென்னையில் உள்ள முக்கியப் பகுதியான பர்மா பஜார், ரிச்சி தெரு உள்ளிட்ட இடங்களில் திருட்டு விசிடி, டிவிடிக்களை எளிதில் வாங்க முடிகிறது.
ஆனால் மாபெரும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அரசு அலுவலக வளாகங்களிலேயே திருட்டு விசிடிக்கள், டிவிடிக்கள் அதிக அளவில் புழங்குவதுதான்.
சென்னையில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள், திருட்டு விசிடிக்களை, டிவிடிக்களை சக ஊழியர்கள் மத்தியில் வாடகைக்கு விடுகின்றனராம். விசிடி என்றால் 10 ரூபாய்க்கும், டிவிடி என்றால் 20 ரூபாய்க்கும் அவர்கள் வாடகைக்கு விடுகின்றனர்.
புத்தம் புதுப் படங்கள் அனைத்தும் உடனுக்குடன் இவர்கள் கைக்கு வந்து விடுகிறதாம். இதனால் அரசு அலுவலர்கள் பலர் திருட்டு விசிடி விற்பனையில் கொடி கட்டிப் பறந்து வருகிறார்கள்.
இன்னொரு அதிர்ச்சியாக தமிழக அரசின் தலைமை இடமான, தலைமைச் செயலக வளாகத்திலேயே நேற்று ஒருவர் திருட்டு விசிடிக்கள், டிவிடிக்களை கடை பரப்பி விற்று அதிர்ச்சியூட்டியுள்ளார்.
தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள அரசு ஊழியர் கூட்டுறவு சங்க ஹோட்டலுக்குப் பின்புறம் கீழே துணியை விரித்து புதுப் படங்களின்திருட்டு விசிடி, டிவிடிக்களைப் போட்டு விற்றார் அவர்.
அதில் பெரும்பாலானவை தமிழ் படங்கள் ஆகும். இந்திப் படங்களான ஓம் சாந்தி ஓம், சாவரியா உள்ளிட்ட படங்கள் மற்றும் ஆங்கிலப் பட விசிடிக்கள், டிவிடிக்களும் படு ஜோராக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
பல அரசு ஊழியர்கள் கூட்டமாக கூடி நின்று அதை வாங்கிச் சென்றனர். இவர் விற்ற இடத்திற்கு அருகேதான் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. இங்குதான் அரசின் அனைத்துத் துறைச் செயலாளர்கள் அலுவலகங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறிந்து சில பத்திரிக்கையாளர்கள் அங்கு புகைப்படக்காரர்களுடன் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அந்த திருட்டு விசிடிக்காரர் கடையைக் காலி செய்து விட்டு ஓடி விட்டார்.
அரசு அலுவலங்கள், தலைமைச் செயலக வளாகத்திலேயே இப்படி திருட்டு விசிடி விற்பனை மற்றும் வாடகைக்கு விடுவது நடந்து வருவது குறித்து காவல்துறை கவனித்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications