உண்ணாவிரதம் இருந்த 5 வேளாண் மாணவ, மாணவிகள் மயக்கம்
கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவை மாணவ, மாணவியர் 5 பேர் நேற்று மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேளாண்மைத் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கு வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள், வனக் கல்லூரி, தோட்டக் கலைக் கல்லூரி ஆகியவற்றின் மாணவ, மாணவியர் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவ, மாணவியருக்கும், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவ, மாணவியர் இறங்கியுள்ளனர். இதையடுத்து கல்லூரிகள், விடுதிகள் மூடப்பட்டு விட்டன.
கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கொட்டும், மழை, பனியைப் பொருட்படுத்தாமல், மாணவ, மாணவியர் வெட்ட வெளியில் மரத்தடிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் போக்கால் தாங்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த காயத்ரி, கோதை, மதி, சுகுந்தன், பிரபு ஆகிய மாணவ, மாணவியர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
கோவையைப் போல, மதுரை வேளாண்மைக் கல்லூரி, திருச்சி வேளாண்மைக் கல்லூரி, கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி, குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி ஆகிய இடங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications