இலங்கைக்கு ஆதரவாக பேசும் கடற்படை அதிகாரிகள்: வைகோ கண்டனம்
சென்னை: இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவாத இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய கடற்படை அதிகாரிகள் பேசி வருவது கண்டனத்துக்குரியது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய கடற்படை அதிகாரி வேன் ஹேல்டெரன், இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை ஆதரித்து பேசியுள்ளார்.
மக்கள் ஆட்சி நடைபெறுகிற இந்தியாவில், இதுவரையிலும் பொறுப்பு வகித்த படைத் தலைவர்கள், செய்தியாளர்களிடம் கருத்துக்களைக் கூறும்போதும், அறிக்கைகள் வெளியிடும்போதும், மிகவும் கவனமாக, எச்சரிக்கையோடு செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் அண்மைக்காலமாக, படைத்தலைவர்கள், அதிலும் குறிப்பாகக் கடற்படையினர், இலங்கை அரசுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டும், கருத்துக்களை தெரிவித்தும் வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்கள் இந்திய கடற்படையில் வேலை பார்க்கிறார்களா அல்லது இலங்கைக் கடற்படைக்காக பணியாற்றுகிறார்களா என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து இந்திய அரசே நாடாளுமன்றத்தில் பலமுறை ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய கடற்படைக்கும், இலங்கை கடற்படைக்கும் இடையே சட்டத்துக்கு எதிரான கள்ளத் தொடர்புகள் இருப்பதும், இலங்கை கடற்படையினருக்கு துப்புக் கொடுப்பதும், இலங்கையில் நடைபெறுகின்ற சண்டையில், தமிழர்களை கொன்று குவித்து வருகின்ற சிங்கள இனவாத இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்ற ஒரு துரோகம் ஆகும் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை கடற்படைக்கு உதவ வேண்டும் என்று திட்டமிட்ட நோக்கத்துடன் இந்தியா செயல்படுவதும், இந்திய கடற்படை அதிகாரிகள், தங்கள் எல்லையை மீறி கருத்துக்களை வெளியிட்டு இலங்கையை ஆதரிப்பதும் எதைக் காட்டுகிறதென்றால், நேருவால் வகுக்கப்பட்டு இந்திரா காந்தியால் செயல்படுத்தப்பட்ட இந்தியாவின் வெளியுறவு கொள்கை குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதோ என்பதைத் தான் காட்டுகிறது.
அதைவிடக் கொடுமை, இந்திய கடற்படையினர், இந்திய மீனவர்களை பாதுகாப்பதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொண்டதில்லை. ஒரு முறையேனும் இலங்கைக் கடற்படைக்கு எச்சரிக்கை கூட விடுத்ததில்லை.
எனவே இலங்கை கடற்படையினருக்கு உதவிகள் செய்வதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஏற்கனவே இலங்கை விமானப்படைக்கு வழங்கிய ரேடார்களை உடனடியாக திரும்பப் பெற
வேண்டும் என்றும், தங்கள் எல்லையை மீறிச் செயல்பட்டு வருகின்ற இந்திய கடற்படை அதிகாரிகளை எச்சரிக்கை செய்ய வேண்டும் என வைகோ அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.