புலிகள் எதிர்ப்பு இலங்கை தமிழ் எம்பிக்கள் டெல்லி வருகை
டெல்லி: இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ் எம்.பிக்கள் அனந்தசங்கரி, ஸ்ரீதரன், டி.ஸ்ரீதரன் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர். இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தியத் தலைவர்களை சந்திக்கன்றனர்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த அனந்த சங்கரி, தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் டி.ஸ்ரீதரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்ரீதரன் ஆகியோர் இலங்கை அரசுக்கு ஆதரவான தமிழ் எம்.பிக்கள் ஆவர்.
கடந்த வருடம் மூன்று பேரும் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அப்போது விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்போது அவர்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது 3 பேரும் மீண்டும் டெல்லி வந்துள்ளனர். மூன்று பேரையும் இந்திய அரசு அழைக்கவில்லை என்றும், அவர்கள் தனிப்பட்ட முறையில், வந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
டெல்லியில் முக்கியத் தலைவர்களை சந்தித்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையை 3 பேரும் வைக்கவுள்ளதாக தெரிகிறது. சென்னைக்கும் இவர்கள் வரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
மூன்று கட்சிகளைச் சேர்ந்த இந்த எம்.பிக்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவிரமாக செயல்படுபவர்கள். இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள இடைக்கால மாகாண கவுன்சிலில் அனந்த சங்கரிக்கு முக்கியப் பதவி கொடுக்க அதிபர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அனந்த சங்கரி தலைமையில் 3 எம்.பிக்கள் டெல்லி வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும், மூன்று கட்சிகளும், இந்தியாவில் உள்ளதைப் போன்ற அரசு நிர்வாகத்தை இலங்கையிலும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே கருத்தையே இந்திய அரசும் வலியுறுத்தி வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் பின்னணியில் புலிகளுக்கு எதிர்ப்பான, இலங்கை அரசுக்கு ஆதரவான மூன்று முக்கிய கட்சிகளின் எம்.பிக்கள் டெல்லி வந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications