முதல்வர் அலுவலக அதிகாரி வீட்டில் கொள்ளை
சென்னை: சென்னையில் முதல்வர் அலுவலக அதிகாரியின் வீட்டிலேயே துணிகர கொள்ளை நடந்துள்ளது.
சென்னையில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் காங்கிரஸ் பிரமுகர் சக்கரபாணி ரெட்டியாரின் உறவினர் வீட்டில் நேற்று முன்தினம் 250 பவுன் நகைகள், ரூ. 30 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை நகருக்குள்ளேயே துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கொள்ளை போன வீட்டில் வசித்து வருபவர், முதல்வர் அலுவலக தனிப்பிரிவில் அதிகாரியாக இருக்கும் ராஜேஷ் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது.
ராஜேஷ் தனது குடும்பத்தினருடன், கோயம்பேடு, தெற்காசிய விளையாட்டு கிராம குடியிருப்பில் வசித்து வருகிறார். ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் வெளியூர் போயிருந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சிலர் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதற்கு முன்பாக அக்கம் பக்கத்து வீடுகளின் கதவுகளை வெளியில் இருந்தபடி பூட்டி விட்டனர்.
உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரூ. 60 ஆயிரம் ரொக்கப் பணம், 4 பாஸ்போர்ட்டுகள், பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிக் கொண்டு சென்று விட்டனர்.
முதல்வர் அலுவல அதிகாரியின் வீட்டிலேயே கொள்ளை நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.