தஸ்லிமாவுக்கு மத்திய அரசு திடீர் நிபந்தனை
டெல்லி: டெல்லியில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். வெளியில் எங்கும் போக அனுமதி தரப்பட மாட்டாது. அப்படிப் போவதாக இருந்தால் பேசாமல் நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டிப்பாக கூறியுள்ளதால் தஸ்லிமா பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள தஸ்லிமா, கொல்கத்தாவில் வசித்து வந்தார். ஆனால் அவருக்கு எதிராக முஸ்லீம்கள் பெரும் போராட்டத்தில் குதித்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஜெய்ப்பூருக்குப் போனார். பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
டெல்லியில் தற்போது மத்திய அரசின் பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் தஸ்லிமா தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தஸ்லிமாவுக்கு திடீரென மத்திய வெளியுறவுத்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதற்குக் கட்டுப்படாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அரசு கூறியுள்ளதால், தஸ்லிமா பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக தஸ்லிமா கூறுகையில், நான் இந்தியாவில் தொடர்ந்து வசிக்க வேண்டுமானால், ரகசிய இடத்திலிருந்து வெளியில் எங்கும் செல்ல கூடாது. நான் யாரையும் சந்திக்கக் கூடாது. கிட்டத்தட்ட வீட்டுக் காவலைப் போலத்தான் நான் இருக்க வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் நான் இந்தியாவில் இருக்க முடியாது, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய அரசு என்னிடம் கூறியுள்ளது.
நான் கிரிமினல் இல்லை. எந்தக் குற்றத்தையும் நான் செய்யவில்லை. எனக்கு ஏன் இப்படி ஒரு நிபந்தனை என்று புரியவில்லை.
குறைந்தபட்சம் டெல்லிக்குள் மட்டுமாவது நான் சுதந்திரமாக இருக்க அனுமதிக்க வேண்டும் என வெளியுறவுத்துறையிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு நான் இப்படி வீட்டுக் காவலில் இருக்க வேண்டும் என்றும் புரியவில்லை என்று கூறியுள்ளார் தஸ்லிமா.