கிறிஸ்துமஸ்: மன்மோகன் சிங், கருணாநிதி, ஜெ. வாழ்த்து
டெல்லி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரதமர் மன்மோகன் சிங், தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மனமோகன் சிங் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இயேசு கிறிஸ்துவின் சகோதரத்துவம், தியாகம், பொறுமை ஆகிய செய்திகளை கொண்டாடும் திருநாள் கிருஸ்துமஸ்.
கிறிஸ்துவின் போதனைகளை அனைவரும் உள்வாங்கிக் கொண்டு அதை செயல்படுத்த இந்த தருணத்தில் உறுதி பூண வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சகோதரத்துவம், அன்பு, தியாகம், அமைதி, ஒற்றுமை உலகெங்கும் பரவ இந்த பண்டிகை உதவட்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சிறுபான்மையினரின் உண்மையான நண்பனாக திமுக அரசு விளங்குகிறது. கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த அரசுதான் அளித்தது.
அன்பே அனத்திற்கும் அடிப்படை என்று போதித்தவர் இயேசு பிரான். அதேபோல கிறிஸ்தவர்களும் எளிமை, மன்னிக்கும் குணம், உதவும் குணத்திற்குப் பெயர் போனவர்கள்.
இயேசு பிரான் போதித்த அன்பு, சகிப்புத்தன்மை ஆகியவை பரவ உறுதி பூணுவோம். சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளை அகற்றவும், ஏழைகளின் உயர்வுக்குப் பாடுபடவும் உறுதி மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஒவ்வொருவருக்குள்ளும், சகோதரத்துவும், சமூக ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை இந்த நாளில் உருவாக்கிக் கொள்வோம்.
கிறிஸ்தவர்களின் வாழ்வில் இருள் நீங்கி வெளிச்சம் பரவ இந்த நாள் உதவட்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications