சோனியா பேச்சால் குஜராத்தில் கவிழ்ந்த காங்கிரஸ்

அகமதாபாத்: சோனியா காந்தி உச்சரித்த மரண வியாபாரிகள் என்ற வார்த்தைதான் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியைத் தேடிக் கொடுத்து விட்டதாக அபிப்பிராயம் நிலவுகிறது.
ஒரு வார்த்தை, அனைத்தையும் புரட்டிப் போட்டு விட்டது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அது குஜராத் காங்கிரஸ் விஷயத்தில் உண்மையாகியுள்ளது.
சோனியா காந்தியின் பிரசாரம் ஆரம்பிக்கும் வரை குஜராத் மாநில காங்கிரஸார் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். கோத்ராவில் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் உள்ளிட்ட பல விவகாரங்கள் பாஜகவுக்கு பாதகமாக இருந்தது.
ஆனால் சோனியா காந்தி பிரசாரத்திற்கு வந்து, மரணத்தின் வியாபாரிகள் என கடுமையாக விமர்சித்துப் பிரசாரம் செய்தது, காங்கிரஸுக்கு எதிர்மறையாக மாறி விட்டது எனக் கூறப்படுகிறது.
சோனியா காந்தியின் இந்தப் பிரசாரத்திற்கு முன்பு வரை நரேந்திர மோடி, தனது ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி மட்டுமே தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால் சோனியா காந்தி மரண வியாபாரிகள் என்று விமர்சித்தவுடன் அவர் ஹிந்துத்துவாவை கையில் எடுத்துக் கொண்டார். சொராபுதீன் ஷேக் படுகொலை நியாயமானதுதான் என்று அவர் பேசப் போக மதவாத பிரசாரம் சூடு பிடித்துக் கொண்டது.
அதுவரை அமைதியாகப் போய்க் கொண்டிருந்த பிரசாரம், வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த பாஜகவின் பிரசாரம், மதவாத பிரசாரமாக மாறியதை சரியான முறையில் தடுத்து கவுண்டர் செய்ய காங்கிரஸ் தவறி விட்டதாகவே தேர்தல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர்களும், பாஜக தலைவர்களும் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்களே தவிர, பாஜகவின் மதவாதப் பிரசாரத்தை சரியான திசையில் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தவறி விட்டதால்தான், வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் சோனியா காந்தியின் பேச்சை, மோடி மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். மரணத்தின் வியாபாரிகள் என சோனியா கூறியது என்னை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் அவர் இழிவுபடுத்தி விட்டார். குஜராத்திகளை மரணத்தின் வியாபாரிகள் என சோனியா வர்ணித்துள்ளார் என்று தன்னை நோக்கி வந்த அம்பை, சாதுரியமாக காங்கிரஸ் மீதே திருப்பி விட்டார்.
மேலும், குஜராத் மாநில அரசு ஊழியர்களையும் கூட சோனியா காந்தியின் இந்த வார்த்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மோடி நிர்வாகம் என்றால் அது அரசு ஊழியர்களையும் சேர்த்துத்தான் என்பதால், அவர்களும் கூட காங்கிரஸுக்கு எதிராக திரும்பி விட்டதால்தான் ஒட்டுமொத்தமாக காங்கிரஸுக்கு பெருத்த அடி விழுந்து விட்டதாக தேர்தல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
தோல்வி குறித்து ஆலோசனை:
இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்விடைந்தது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை சோனியா டெல்லியில் கூட்டியுள்ளாராம். இதில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications