பண வசூலில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு தர்ம அடி
வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே லஞ்சம் வசூலித்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரரை பொதுமக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அருகே உள்ள அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார்.
விடுமுறையில் ஊருக்கு வந்த திருப்பதி இரவில் தனது சீருடையை அணிந்து கொண்டு நண்பர்களுடன் புத்தகரம் சாலைக்கு வந்தார். அங்கு நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார்.
அவரை போலீஸ்காரர் என நினைத்துக் கொண்ட அப்பாவி வாகனதாரர்கள், திருப்பதி கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு சென்றனர். இப்படியாக வசூலித்துக் கொண்டிருந்த திருப்பதியும், அவரது கூட்டாளிகளும், சிவக்குமார் என்பவரை நிறுத்தி பணம் கேட்டனர்.
ஆனால் திருப்பதி மீது சிவக்குமாருக்கு சந்தேகம் வந்தது. வீட்டுக்குப் போய் லைசன்ஸை எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு சென்றார். பின்னர் ஊருக்குள் போய் ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்தார்.
விரைந்து வந்த ஊர் மக்கள், திருப்பதியையும், அவரது கூட்டாளிகளையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரை ஊருக்குள் கொண்டு போய் விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக உதைத்தனர். பின்னர் கந்திலி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து திருப்பதியை மீட்டு அவரைக் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரது கூட்டாளி முனியசாமி என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications