உசிலம்பட்டியில் சாலை மறியல்-போலீஸ் தடியடி, கல்வீச்சு
மதுரை: மதுரை அருகே உசிலம்பட்டியில் சாலை மறியல் செய்த மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பொது மக்கள் போலீசார் மீது நோக்கி கல்வீச்சு நடத்தினர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஏரவாப்பட்டி என்ற ஊரில் கடந்த வருடம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் கணேசன் என்பவர் மனைவி ஒச்சம்மாளும், சேகர் என்பவரது மனைவி திலகராணியும் பேட்டியிட்டனர்.
இதில் ஒச்சம்மாளுக்கு தேர்தல் ஏஜெண்டாக தெத்துப்பட்டி குணசேகரன் என்பவரும், திலகராணிக்கு தேர்தல் ஏஜெண்டாக சேகரும் பணியாற்றினர். அந்த தேர்தலில் ஒச்சம்மாள் வெற்றி பெற்றார்.
இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சேகர் அடியாட்களுடன் வந்து குணசேகரனை தாக்கினார். இது குறித்து குணசேகரன் போலீசில் புகார் செய்தார். ஆனால் இந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்காததால் உசிலம்பட்டி- விக்ரமங்கலம் சாலையில் தனது ஊரைச் சேர்ந்த பொது மக்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த மதுரை எஸ்.பி. அன்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகும்படி கூறினார். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் எஸ்பியின் பேச்சை அலட்சியப்படுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதில் 8 போலீசார் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் உசிலம்பட்டி-விக்ரமங்கலம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.