மனித வெடிகுண்டு தாக்குதல்-பெனாசிர் பூட்டோ படுகொலை

ராவல்பிண்டி: ராவல்பிண்டி நகரில் நடந்த மனித குண்டு தாக்குதலில் அந் நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் புட்டோ கொல்லப்பட்டார்.
பர்வேஸ் முஷாரப் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தனது கணவர் ஆசிப் சர்தாரியுடன் லண்டனில் தஞ்சம் புகுந்தார் பெனாசிர். சமீப காலமாக பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்டு வரும் அதிவேக மாற்றங்களைத் தொடர்ந்து முஷாரப்பின் வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தான் திரும்பினார்.
ஆனால், முஷாரப்புக்கு எதிரான தனது அரசியல் நிலைப்பாட்டை அவர் கைவிடவில்லை. தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள், பேரணிகளை நடத்தி வந்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இன்று தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் ராவல்பிண்டியில் மாபெரும் பேரணியை பெனாசிர் நடத்தினார். மேடையில் பேசி முடித்துவிட்டு பெனாசிர் கிளம்பியபோது அவர் மீது துப்பாக்கச் சூடு நடந்தது. இதில் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது.
அதைத் தொடர்ந்து மிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
அதில் பெனாசிர் படுகாயமடைந்தார். மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்படும்போதே அவர் பலியானார். மனித வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாலை 6.15 மணியளவில் இச் சம்பவம் நடந்தது.
பெனாசிருக்கு பாகிஸ்தானின் பழமைவாதிகளும், அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவத்திலும் அவருக்கு எதிரிகள் அதிகம்.
இந்த குண்டுவெடிப்பில் மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications