மதுரை அருகே பெண் சிசுக் கொலை - போலீஸில் புகார்
மதுரை: மதுரை அருகே பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கொல்லப்பட்டதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மகப்பேறு நல அதிகாரி எஸ்.வசந்தி இதுதொடர்பாக காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமான புகார் கொடுத்துள்ளார்.
அதில், விக்கிரமங்கலம் அருகே உள்ள காளிக்கண்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரின் மனைவி வளர்மதி. இவருக்கு மதுரை தேம்பாவனி மருத்துவமனையில் டிசம்பர் 12ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்தபோது அதன் எடை 3.15 கிலோவாக இருந்தது. நல்ல நலத்துடன் இருந்த அந்தக் குழந்தை டிசம்பர் 17ம் தேதி மரணமடைந்தது.
நல்ல நலத்துடன் இருந்த குழந்தை இறந்திருப்பதால் அதன் சாவில் சந்தேகம் வருகிறது. குழந்தை இறந்ததும் உடனடியாக அதை பெற்றோர் எரித்து விட்டனர்.
எனவே இதுகுறித்து விசாரித்து அந்தக் குழந்தை இயற்கையாக இறந்ததா அல்லது கொல்லப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விக்கிரமங்கலம் பகுதியில் பெண் சிசுக் கொலை அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. விஷ விதைகளைக் கொத்தும், நெல் விதைகளை மூக்கில் திணித்தும் குழந்தைகளைக் கொல்வதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வருவது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications