சபரிமலை-14ம் தேதி மகர விளக்கு
பத்தனம் திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.
இதற்காக மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி கோவில் கருவறைக் கதவை திறந்து வைத்து பாரம்பரிய விளக்கை ஏற்றி வைத்தார்.
இன்று காலை கணபதி பூஜையுடன் கோவிலின் வழக்கமான பூஜைகள் தொடங்கின. கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு பூஜைகளை தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷங்களை எழுப்பி பய பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜனவரி 11ம் தேதி புகழ் பெற்ற பேட்டைத்துள்ளல் நிகழ்ச்சி நடைபெறும்.
ஜனவரி 12ம் தேதி பந்தளம் வலியகொய்க்கல் சாஸ்தா கோவிலிலிருந்து சன்னிதானம் நோக்கி திருவாபரண ஊர்வலம் தொடங்கும். ஜனவரி 13ம் தேதி பம்பா விளக்கு மற்றும் பம்பா சத்யா ஆகியவை நடைபெறும்.
ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அதே நாளில் திருவாபரண ஊர்வலம் சன்னிதானத்தை அடையும்.
ஜனவரி 18ம் தேதி உச்சிகால பூஜைக்கு முன்னதாக அய்யப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படும். கலாபபிஷேகமும் அன்று நடைபெறும். ஜனவரி 19ம் தேதி மாளிகைபுரத்தில் குருதி பூஜை நடைபெறும்.
ஜனவரி 20ம் தேதி பந்தளம் அரண்மனைப் பிரதிநிதி தரிசனம் செய்வதோடு அன்று இரவு 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.