புத்தாண்டு: சென்னை திருப்பதி கோவிலில் 1 லட்சம் லட்டு வழங்க ஏற்பாடு
சென்னை: புத்தாண்டையொட்டி சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 1 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதேபோல சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக 1 லட்சம் லட்டுக்களை தயாரித்து வைத்துள்ளனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனைக் குழு பொறுப்பாளர் அனந்தகுமார் ரெட்டி கூறுகையில், ஜனவரி 1ம் தேதியன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு தரப்படும். இதற்காக 1 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு இலவசமாக லட்டு தருவது இதுவே முதல் முறையாகும்.
இதுதவிர சிறப்பு கவுண்டர்கள் மூலமும் லட்டுக்கள் விற்பனைக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புக்கும் காவல்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
புத்தாண்டையொட்டி அதிகாலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை கோவில் திறந்திருக்கும் என்றும் ரெட்டி தெரிவித்தார்.