பெனாசிர் மகனுக்கு கடும் பாதுகாப்பு
லண்டன்: கொல்லப்பட்ட பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளவருமான பிலாவல் பூட்டோவுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் அறிவித்துள்ளனர்.
பெனாசிரின் மகன் பிலாவல் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். தாயாரின் மரணத்தைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தான் திரும்பினார்.
பெனாசிர் உடல் அடக்கத்திற்குப் பின்னர் அவர் எழுதி வைத்த உயில் படிக்கப்பட்டது. அதில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக பிலாவல் பூட்டோ நியமிக்கப்பட வேண்டும். அதற்கான வயது (தேர்தலில் நிற்பதற்கான வயது) வரும் வரை கணவர் ஆசிப் அலி சர்தாரியே கட்சித் தலைமைப் பொறுப்பை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் பெனாசிர்.
இதையடுத்து பிலாவல் பூட்டோ கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். தாயாரின் மரணத்தையடுத்து பாகிஸ்தான் வந்திருந்த பிலாவல், தனது சகோதரிகள் பக்தவார், ஆசிபா ஆகியோரோடு துபாய் சென்றுள்ளார்.
துபாயில்தான் பெனாசிரின் தாயார் நுஸ்ரத் வசித்து வருகிறார். அங்கு சில நாட்களுக்கு பிலாவல் தங்கவுள்ளார். அதன் பின்னர் அவர் படிப்பைத் தொடர லண்டன் திரும்புகிறார்.
24 மணி நேர பாதுகாப்பு:
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. 24 மணி நேரமும் பிலாவல் பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருப்பார்.
இதுதொடர்பாக ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அதிகாரிகள், பாகிஸ்தான் மக்கள் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யவுள்ளனர்.
பிலாவல் தங்கியுள்ள விடுதி அறையில் எச்சரிக்கை மணி பொருத்தப்படவுள்ளது. மேலும் ரகசிய கேமராக்களும் பொருத்தப்படவுள்ளன.
ஒருவேளை பிலாவலுக்கு குறிப்பிட்ட கொலை மிரட்டல் ஏதேனும் வந்தால் இந்த பாதுகாப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கப்படும் என ஸ்காட்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்ட் சர்ச் கல்லூரியில் முதலாமாண்டு வரலாறு பட்டப் படிப்பை படித்து வருகிறார் பிலாவல். ஜனவரி 13ம் தேதி முதல் அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் தொடங்கவுள்ளன.