கென்யா கலவரம்: இந்தியர்களுக்கு பாதிப்பில்லை - மத்திய அரசு
டெல்லி: கென்யாவில் அதிபர் கிபாகியை எதிர்த்து நடந்து வரும் பெரும் கலவரத்தால் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்தியர்கள் நடத்தி வரும் ஹோட்டல்கள் உள்ளிட்டவை சூறையாடப்பட்டுள்ளன.
கென்யாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் கிபாகி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ரெய்லா ஒடிங்கா ஏற்கவில்லை. தில்லுமுல்லு செய்து விட்டார் கிபோகி என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து ஒடிங்காவின் கட்சியினரும், ஆதரவாளர்களும் பெரும் கலவரத்தில் இறங்கினர். இது தற்போது இரு பிரிவினருக்கு இடையிலான இன மோதலாக வெடித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக அங்கு நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் நைரோபி முதல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கலவரம் தீவிரமாக பரவியுள்ளது. எங்கு பார்த்தாலும் பிணக்காடாக உள்ளது. குவியல் குவியலாக பிணங்களைப் பார்க்க முடிகிறது.
சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், அறைகளில் அடைத்து வைத்து எரித்தும் கொடூரமாக கொல்கின்றனர்.
இந்தக் கலவரத்தால் இந்தியர்களுக்கு இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை (ஜனவரி 2) கூறுகையில், கென்யாவில் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் இந்தியர்கள் வரை வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இருப்பினும் இந்தியர்கள் வைத்திருக்கும் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல நிறுவனங்கள், கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளன.
இருப்பினும் ஒரு இந்தியர் கூட வன்முறையால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. இந்தியர்களையோ அல்லது ஆசியர்களையோ குறி வைத்து கலவரம் நடக்கவில்லை என்பதால் இந்தியர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications