பள்ளிவாசலுக்குள் புகுந்து தகராறு - கடையநல்லூரில் பதட்டம்
கடையநல்லூர்: கடையநல்லூரில் பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் இரு அமைப்பினரிடையே இருந்து வரும் தொடர் மோதலால் இன்று தொழுகை நடத்துபவரை தாக்கி பள்ளிவாசலின் பூட்டை உடைத்து 6 பேர் கொண்ட கும்பல் நுழைய முயன்றது. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் மெயின் பஜாரில் அல் முபராக் மஸ்ஜீத் பள்ளிவாசல் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி வாசலை நிர்வாகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு பள்ளி வாசலில் தொழுகையை நடத்துபவரும், ஜாக் அமைப்பை சேர்ந்தவருமான முகமது இஸ்மாயில் பள்ளிவாசலுக்கு வந்துக் கொண்டிருந்தார்.
அவர் பள்ளிவாசலை நெருங்கியதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சேகனா உள்பட 6 பேர் கொண்ட கும்பல் முகமது இஸ்மாயிலை சராமரியாக தாக்கியது. அவர் சுதாரிப்பதற்குள் பூட்டை உடைத்து பள்ளி வாசலுக்குள் நுழைய முயன்றது. அவர் சத்தம் போடவே கும்பல் தப்பியோடி விட்டது.
இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications