அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் முடிவு: சிரஞ்சீவி
ஹைதராபாத்: அரசியலில் புகுவது குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
இது திரைத்துறையினர், குறிப்பாக ஹீரோக்கள் அரசியலில் புகும் காலம். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் தமிழக அரசியலில் பிரவேசித்தார். தொடர்ந்து கார்த்திக், சரத்குமார் என முன்னணி ஹீரோக்கள் அரசியல் பிரவேசம் செய்தனர்.
தற்போது ஆந்திராவிலும் இந்த டிரெண்ட் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. சிரஞ்சீவி அரசியலில் நுழையப் போவதாக செய்திகள் வெளியானது முதல் அங்கு தொடர்ந்து பரபரப்பாகவே இருந்து வருகிறது.
சிரஞ்சீவி தனிக் கட்சி ஆரம்பிப்பாரா அல்லது வேறு ஏதேனும் கட்சியில் சேருவாரா என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மரணமடைந்த சிரஞ்சீவியின் தந்தை வெங்கட் ராவின் 11வது நாள் காரியம் நேற்று (ஜனவரி 3) நடந்தது. இதில் கலந்து கொண்ட சிரஞ்சீவியிடம் செய்தியாளர்கள், எப்போது அரசியலுக்கு வரப் போகிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு சிரஞ்சீவி, இப்போது நான் அதுகுறித்து சிந்திக்கவில்லை. தந்தையின் சடங்கு நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளேன் என்றார்.
அப்படியும் விடாத பத்திரிக்கையாளர்கள், எப்போது வருவேன் என்பதை சூசகமாவது சொல்ல முடியுமா என்று கேட்டனர். விரைவில் முடிவெடுப்பேன், கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று சிரித்தபடி கூறினார்.
அப்போது சிரஞ்சீவியின் அருகில் இருந்த அவரது மைத்துனரும், நெருங்கிய நண்பருமான அல்லு அரவிந்த், நாங்கள் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் காத்திருக்கிறோம். இதுவரை எந்த ரயிலிலும் ஏறவில்லை. சரியான நேரத்தில் எங்களது ரயிலில் ஏறுவோம் என்று இலைமறை காய் மறையாக பதிலளித்தார்.
சிரஞ்சீவியின் பதிலையும், அல்லு அரவிந்த்தின் கருத்தையும் பார்க்கும்போது சிரஞ்சீவி விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ஜனவரி 19ம் தேதி மாபெரும் பேரணியை நடத்த சிரஞ்சீவி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் சிரஞ்சீவி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
குறி வைக்கும் மாயாவதி:
இதற்கிடையே, சிரஞ்சீவியை இழுக்க உ.பி. முதல்வர் மாயாவதி தீவிர முயற்சிகளைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிராமணர்களின் ஆதரவுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து சாதனை படைத்த மாயாவதி தற்போது நாடு முழுவதும் தனது உ.பி. பார்முலாவை பயன்படுத்தி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் யோசனையுடன் மாநில சுற்றுப்பயணத்ைத ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் சகோதரத்துவ மாநாட்டை நடத்தி பெரும் கூட்டத்தைக் கூட்டிக் காண்பித்தார். பின்னர் கேரளா சென்ற அவர் அங்கு பெருமளவில் உள்ள ஈழவா சமுதாயத்தினரை ஈர்க்கும் வகையில் நாராயண குரு தொடர்பான விழாவில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை தனது கூட்டணியில் இணைத்தால் ஆந்திராவில் உள்ள பிற்பட்ட சமுதாயத்தினரின் வாக்குகளை கணிசமாக அள்ளி விடலாம் என கணக்குப் போட்டு சிரஞ்சீவிக்குத் தூது அனுப்பியுள்ளாராம்.
சிரஞ்சீவி காப்பு பிரிவைச் சேர்ந்தவர். ஆந்திராவில் 10 சதவீதம் பேர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இது தவிர ஆந்திராவில் ஏற்கனவே பாதிக்கு மேற்பட்டோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே சிரஞ்சீவியைப் பிடித்தால் ஆந்திராவில் பாதியைப் பிடித்தது போல என்பது மாயாவதியின் கணக்கு.
மாயாவதி மனசுப்படி நடக்குமா என்று அரசியல் வட்டாரம் ஆவலோடு எதிர்பார்த்துள்ளது.