நெல்லையைப 'புறக்கணித்த' சுதந்திரா எக்ஸ்பிரஸ் ரயில்
நெல்லை: வீரம் நிறைந்த ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களையும், தலைவர்களையும் கொடுத்த நெல்லையில் நிற்காமல், 'சுதந்திரா எக்ஸ்பிரஸ்' ரயில் சென்றது நெல்லை மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
முதல் சுதந்திர போராட்டத்தின் 150வது ஆண்டுவிழா மற்றும் பகத்சிங் பிறந்த நாள், இந்தியா விடுதலை அடைந்த ஆண்டு ஆகியவற்றை கொண்டாடும் வகையில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகமும், கலாச்சார துறை அமைச்சகமும் இணைந்து சுதந்திர போராட்ட ரயில் கண்காட்சி (ஆசாத் எக்ஸ்பிரஸ் - தமிழில் சுதந்திரா எக்ஸ்பிரஸ்) ஒன்றை உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் இந்த ரயில் சென்று வருகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த 8ம் தேதி காலை கன்னியாகுமரியை இந்த ரயில் வந்தடைந்தது. ரயிலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷிரு பார்வையிட்டார்.
மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்ட பின்னர் 10ம் தேதி இரவு 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணியளவில் நெல்லை வந்தது. ஆனால் நெல்லையில் அந்த ரயில் நிற்கவில்லை. மாறாக நேராக மதுரைக்குப் போய் விட்டது.
நெல்லைச் சீமை சுதந்திரப் போராட்ட களத்தில் மிகப் பெரிய பங்கு வகித்ததாகும். மகாகவி பாரதியார் அவதரித்தது இந்த மாவட்டத்தில்தான். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற மாபெரும் வீரன் அவதரித்தது இந்த மண்ணில்தான். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்ைதச் சேர்ந்தவர்தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சுப்ரமணியம்.
இதுதவிர சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன், செண்பகராமன் பிள்ளை என சுதந்திரப் போராட்டத்திற்காக தங்களது உயிர், சொத்து உள்ளிட்டவற்றை தியாகம் செய்த மாபெரும் மனிதர்கள் அவதரித்த பூமி நெல்லை.
அப்படிப்பட்டவர்களைத் தந்த இந்த நெல்லையை சுதந்திரா எக்ஸ்பிரஸ் ரயில் புறக்கணித்துச் சென்றது நெல்லை மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதை விட பெரிய அதிர்ச்சியாக இந்தத் தலைவர்களின் புகைப்படம் ஒன்று கூட அந்த ரயிலில் உள்ள கண்காட்சியில் இடம் பெறவில்லையாம். காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், பகத்சிங் என வட மாநிலத் தலைவர்களின் படங்கள் மட்டுமே அந்த கண்காட்சியை ஆக்கிரமித்துள்ளதாம்.
மேலும், கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் ஆங்கிலேயரை கதிகலங்க வைத்த எம்டன் என்ற நீர்மூழ்கி கப்பலை இயக்கிய செண்பகராமனின் படம் இல்லை. இதற்கு
நெல்லை மாவட்ட வாஞ்சி இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பொதுவாகவே வட மாநிலத்தவர்தான் உயர்த்தி காட்டப்பட்டுள்ளனர், வர்ணிக்கப்பட்டுள்ளனர். தென்னகத்தின் பக்கம் அவர்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. உரிய கெளரவமும், அங்கீகாரமும் கொடுத்ததில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் ஆசாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கண்காட்சி அமைந்திருக்கிறது.
இந்த சுதந்திர போராட்ட கண்காட்சி ரயில் 70 நகரங்களில் நிறுத்தப்பட்டு மே 15ம் தேதி டெல்லியை சென்றடைகிறது.
மதுரையில் ...
நெல்லையைப் புறக்கணித்து மதுரைக்கு வந்த ஆசாத் எக்ஸ்பிரஸ் ரயிலை ஏராளமான பேர் பார்த்து வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் தவிர பெரும் திரளான பொதுமக்களும் ரயிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பார்த்து வருகின்றனர்.
ரயிலின் பொறுப்பாளரான ராகேஷ் சிங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 28ம் தேதி இந்த ரயில் கிளம்பியது.
தற்போது 12வது மாநிலமாக தமிழகம் வந்துள்ளோம். மொத்தம் 21 மாநிலங்களுக்கு இந்த ரயில் செல்கிறது.
வருகிற 13ம் தேதி ராமேஸ்வரம் செல்கிறோம். அதன் பின்னர் சென்னைக்கும், பின்னர் காட்பாடிக்கும் இந்த ரயில் செல்கிறது என்றார்.