மேலும் 2 விடுதலைப் புலிகளின் ஏஜென்டுகள் கைது
சென்னை: தமிழகத்தில் மேலும் 2 விடுதலைப் புலிகளின் ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தீவிர சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நாதன் என்கிற தம்பிதுரை பரமேஸ்வரன் என்பவர் சிக்கினார். அவருக்கு உதவியாக இருந்த 7 இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.
வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாளைக் கொலை செய்யும் நோக்கத்துடன் இவர்கள் இருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் நாதனுக்கு உதவி புரிந்த மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மன்னார்குடியைச் சேர்ந்த செல்வராஜ் (62) மற்றும் ரெஜினால்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இருவரும் நாதனுக்கு, வெடிகுண்டுகள் தயாரிக்கத் தேவையான இரும்பு உருளைகள், பிளாஸ்டிக் உருளைகளை வாங்கிக் கொடுத்துள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாதன் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த இருவரும் சிக்கினர்.
மும்பையிலிருந்து நேற்று காலை சென்னைக்கு வந்தார் செல்வராஜ். சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்து இறங்கிய அவர் மதுரைக்குப் போவதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்தார். அப்போது போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
விருதுநகரில் வைத்து ரெஜினால்டை போலீஸார் கைது செய்தனர்.
செல்வராஜ் வைத்திருந்த 2 பாக்கெட் சாம்பிள் இரும்பு உருளைகள், ரூ. 7000 பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்து விடுதலைப் புலிகளும், அவர்களுக்கு உதவி செய்யும் ஏஜென்டுகளும் பிடிபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் சோதனையை முடுக்கி விட்டுள்ளனர். அனைத்து முகாம்களிலும் தீவிர சோதனை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையர் கற்பூர சுந்தரபாண்டியனின் நேரடிக் கண்காணிப்பில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.