சேது திட்டம்-மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை
சென்னை: சிலரது எதிர்ப்புக்கு பணிந்து சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிடக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழக மக்களின் நீண்ட கால கனவு சேது சமுத்திரத் திட்டம். 1860ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே ஆய்வு நடத்திட தொடங்கப்பெற்று பொறியியல் மேதைகளால் ஏற்றுக் கொள்ளப்பட் திட்டம்.
உலகத் தொடர்புகள், வணிக தொடர்புகள் விரிவாக்கப்பட்டு நம் நாடு மேலும் வளமும் வலிவும் பெறுவதற்குப் பயன்படக் கூடியது.
இத் திட்டத்தை நிறைவேற்றிடத் தொடங்கிய நிலையில்
தற்போது அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் முன்னுக்குப்பின் முரணாக எழுப்புகிற வாதங்களுக்கு செவி சாய்த்து திட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி விடாமல் தமிழக மக்களின் எதிர்காலத்தை ஏற்றமும் வளமும் மிக்க காலமாக மாற்றும் வகையில் அத் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
நதிகள் இணைப்பு:
நதி நீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வான தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
முதற்கட்டமாக, தீபகற்ப நதிகளை (தென்னிந்திய நதிகள்) இணைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனாலும் இந்த விஷயத்தில் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படாத நிலையே உள்ளது.
எனவே தான், தமிழகத்துக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தையாவது செயல்படுத்திட, வரும் 11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நிதி ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், மேலும் தாமதமின்றி இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை இந்த அரசு விரைந்து மேற்கொள்ளும்.
பருவ காலங்களில் தமிழக நதிகளின் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, வறட்சியான பகுதிகள் வளம் பெறும் வகையில் நிலத்தடியில் சேமித்து பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, இந்த அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைக்கும்.
நமது மாநிலத்தின் நீர்ப்பற்றாக்குறை உள்ள பகுதிகளில், ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் வீணாகும் நீரைத் தடுப்பணைகள் மூலமாகச் சேமித்து, ஆண்டு முழுவதும் வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்குப் பயன்படுத்துவதற்கான பெருந்திட்டம் ஒன்று வரும் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.
அருந்ததியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு:
பிற்படுத்தப்பட்ட இனத்தவரான அருந்ததியர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இது குறித்து அனைத்து அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் நிறுவனங்களிலும், மத்திய கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்க இந்த அரசு தொடர்ந்து போராடும் என உரையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications