விஜயகாந்தும், நானும் தனித்துதான் போட்டியிடுவோம் - சரத்குமார்
மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்தும், நானும் கூட்டணி அமைக்கப் போவதில்லை. இருவரும் தனித்து தான் தேர்தல்களில் போட்டியிடுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அஇசமகவின் மாநில மாநாடு பிப்ரவரி 10ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. மாநாட்டு பணிகளை பார்வையிட வந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
மாநாட்டு பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்பார்கள். மாநாட்டில் கட்சியின் சிறப்பு கொள்கைகள் விரிவாக அறிவிக்கப்படும்.
2025 என்ற தொலைநோக்கு பார்வையில் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது, எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைவது போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டதாக எங்கள் கொள்கை இருக்கும்.
தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம். தனித்து ஆட்சி அமைக்க முடியுமா என்பதை அனைவரும் பொறுத்திருந்து பாருங்கள். காட்சிகள் மாறும். என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம்.
எம்.ஜி.ஆரின் வாரிசு யார் என்ற வாக்குவாதம் ஜெயலலிதா-விஜயகாந்த் இடையே நடந்து வருகிறது. நமக்கு முன்னோடிகளாக இருக்கின்ற தலைவர்கள் விட்டுச் சென்ற கொள்கைகள், கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு யார் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
நானும், விஜயகாந்தும் தனித்து தான் போட்டியிடுவோம் என கூறிவிட்டோம். அப்புறம் எப்படி சேர்ந்து இருக்க முடியும்.
மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு மேடைக்கு முக்கியமான சிலர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். அப்படி அவர்கள் வராவிட்டாலும், முக்கியமான கட்டத்தில் அவர்கள் வருவார்கள். அதை யார் என்று இப்போது சொல்லமாட்டேன்.
விருதுநகரில் அமைக்கப்பட உள்ள காமராஜர் மணிமண்டபத்துக்கான வரைபடம் தயாராகி விட்டது. அசோக சக்கர வடிவில் அமைய உள்ள மணிமண்டபத்தின் நடுவே காமராஜரின் பிரம்மாண்டமான சிலையும், அதில் உள்ள ஆரங்களில் 24 தலைவர்களின் சிலைகளும் வைக்கப்படும். அங்கு அரங்கு, கருத்தரங்கு கூடம், சிறுவர் விளையாட்டு பூங்கா போன்ற பல அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என்றார்.