ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக பங்கேற்பு-கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
சென்னை: தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா நேற்று மாலை தேநீர் விருந்தளித்தார். இதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், திமுக கூட்டணிக் கட்சிகள் இந்த விருந்தை கூண்டோடு புறக்கணித்து கருணாநிதிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தன.
குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர், மாநில முதல்வர், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பர்னாலா தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்தில் முதல்வர் கருணாநிதி, துணைவியார் ராஜாத்தி அம்மாள், சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, அவரது மனைவி ஸ்வாதி, டிஜிபி ராஜேந்திரன், உயர் காவல்துறை அதிகாரிகள், பல்வேறு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு:
ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை தேநீர் விருந்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தன. அக்கட்சிகளின் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
மேலும், அதிமுக, மதிமுக, தேமுதிகவும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை.
இதன்மூலம் திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே நிலவும் அதிருப்தி வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நிகழ்ச்சியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு கேடயங்களையும், நினைவுப் பரிசுகளையும் ஆளுநர் வழங்கினார்.
மேலும், தென்னக கலை பண்பாட்டு மையம் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.