பூமிக்குள் விழும் அமெரிக்க உளவு செயற்கைக் கோள்
வாஷிங்டன்: அமெரிக்கா ஏவிய உளவு செயற்கைக் கோள் தனது சக்தியை இழந்து பூமியை நோக்கி வர ஆரம்பித்துள்ளது. இது அடுத்த மாதத்தில் பூமிக்குள் வந்து விழும் எனத் தெரிகிறது. ஆனால், இது எப்போது, எங்கு வந்து விழும் என்று தெரியாதாம்.
வழக்கமாக செயற்கைக் கோள்கள் தங்களது வாழ்நாள் முடிந்துவிட்டால் விண்ணிலேயே குப்பையாக மாறி சுற்றி வரும்.
ஒரு கட்டத்தில் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு உள்ளே வந்து விழும். அவ்வாறு பூமிக்குள் நுழைந்தவுடன் வளி மண்டலத்தில் காற்றின் உராய்வில் உடைந்து, எரிந்து தூளாகிவிடும். சில சமயம் பெரிய அளவிலான பாகங்கள் அப்படியே வந்து விழுவதுண்டு.
சில செயற்கைக் கோள்களின் வாழ்நாள் முடியப் போகும் தருவாயில் அதில் மிஞ்சியுள்ள எரிபொருளை வைத்து அதை பூமிக்குள் கட்டுப்பாடான முறையில் நுழைய வைத்து, அதை கடலுக்குள் விழ வைத்து அழிப்பதும் நடக்கிறது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் இந்த வகையான அழிப்பை எந்த நாடும் செய்வதில்லை.
இதனால் விண்வெளியில் செயற்கைக் கோள் குப்பை வருடந்தோறும் அதிகரித்து வருவதோடு, பூமிக்கும் இதனால் தொடர்ந்து ஆபத்துகள் நேர்ந்து வருகின்றன.
இது போன்ற சம்பவம் 1979ல் நடந்தது. நாஸா ஏவிய 78 டன் கொண்ட ஸ்கைலாப் விண்வெளி நிலையம் பூமிக்குள் வந்து விழுந்தது. ஆனால், அதன் மிகப் பெரிய பாகங்கள் இந்தியப் பெருங்கடலிலும் மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜன நடமாட்டம் அற்ற பகுதிகளிலும் விழுந்தன. இதனால் உயிர்ச் சேதமோ பொருட் சேதமோ ஏற்படவில்லை.
இந் நிலையில் இப்போது மீண்டும் ஒரு அமெரிக்க செயற்கைக் கோளால் ஆபத்து விளைந்துள்ளது. நாஸாவின் கட்டுப்பாட்டை எல்லாம் இழந்துவிட்ட இந்த செயற்கைக் கோளில் என்ன வகையான பொருட்கள் உள்ளன என்று தெரியவில்லை.
இது ஒரு உளவு செயற்கைக் கோள் என்பதால் இது வந்து விழப் போவதைக் கூட அமெரிக்கா இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால், மெல்ல விஷயம் வெளியில் கசிந்துவிட்டதால், இந்த செயற்கைக் ேகாள் விவகாரத்தை உரிய அமைப்புகள் கண்காணித்து வருவதாக மொட்டையாக ஒரு கருத்தை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
இந்த செயற்கைக் கோள் உடையாமல் பூமிக்குள் விழும்பட்சத்தில் அதை ஏவுகணையைக் கொண்டு தாக்கி அழிப்பீர்களா என்ற கேள்விக்கு நோ-கமெண்ட்ஸ் என்று பதில் தந்துவிட்டு அகன்றுவிட்டார் அந்த செய்தித் தொடர்பாளர்.
யார் தலையிலாவது வந்து விழாமல் இருந்தால் சரி...