கடலூர் அரசு மருத்துவமனை: ஜெ. புகாருக்கு அமைச்சர் மறுப்பு
சென்னை:கடலூர் அரசு மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் பதவிக்கு கருணாநிதி வந்ததும், 2007-08ம் ஆண்டில் சுகாதாரத் துறைக்கு ரூ. 2,2865 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதன் மூலம் கூடுதல் டாக்டர்கள், நர்சுகள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் நியமிக்க முடிந்தது. 3,000 கூடுதல் டாக்டர்கள், 3,400 நர்சுகள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர உலக வங்கி நிதியுதவியுடன் மருத்துவமனைகளுக்குப் புதிய கட்டடங்கள், மருத்துவ சாதனங்கள் வாங்கவும் முதல்வர் உத்தரவிட்டார். இதன் காரணமாக சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. மக்களுக்கும் பெரும் பலன்கள் கிடைத்துள்ளன.
கடலூர் அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை, முதல்வர் கருணாநிதி பதவியேற்ற பின்னர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 27 மருத்துவர்களை மட்டுமே கொண்டிருந்த இந்த மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்ப்பட்டு அந்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கடலூர் மருத்துவமனை ஊழியர்கள் எண்ணிக்ைக 275 ஆக இருந்தது. தற்போது இது 328 ஆக உயர்ந்துள்ளது.
காது மூக்கு தொண்டை, ஆபரேஷன், ஆர்த்தோபீடிக்ஸ் உள்ளிட்ட பல்ேவறு பிரிவுகளில் 41 சிறப்பு மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். மொத்தமே 4 பணியிடங்கள்தான் தற்போது இங்கு காலியாக உள்ளது.
இந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி, தீவிர சிகிச்ைசப் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு வசதி, தோல் வியாதிக்கான சிகிச்சைப் பிரிவு ஆகியவை சிறப்புப் பிரிவுகளாக இயங்கி வருகின்றன.
சமீபத்தில் ரூ. 200 கோடி மதிப்பிலான புதிய மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதுதவிர கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக ரூ. 3 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உண்மை இப்படி இருக்க கடலூர் அரசு மருத்துவமனை அவல நிலையில் இருப்பதாக ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. தனது புகார்களை அவர் திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார் அமைச்சர் பன்னீர் செல்வம்.