மகளிருக்கு 33% ஒதுக்கீடு-பாஜக உறுதி
பெங்களூர்: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுதொடர்பாக டெல்லியில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய அரசியலில் இந்த தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. பிற கட்சிகளும் இதை பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களும், பெண்களும் சமம் என்ற இலக்கை நோக்கி அனைவரும் செல்ல பாஜக வழி வகுத்துள்ளது.
அடுத்தபடியாக, 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ள விவசாயிகளின் கடன்களை மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம். புதிய கடன்களை நான்கு சதவீத வட்டியில் தருவோம் எனவும் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவும் முக்கியமான ஒரு தீர்மானம் என்றார் நாயுடு.