எச்.சி.எல் அதிபர் ஷிவ் நாடாரின் 2வது மனைவி திடீர் கைது
மதுரை: எச்.சி.எல். நிறுவன அதிபர் ஷிவ் நாடாரின் 2வது மனைவி ராஜேஸ்வரி திடீரென கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல எச்.சி.எல். நிறுவன அதிபர் ஷிவ் நாடார். இவரது 2வது மனைவி ராஜேஸ்வரி. இவர் மதுரை சமயநல்லூரில் வசித்து வருகிறார். இவருக்கு சிவ நரேஷ் என்ற மகன் உள்ளார்.
கணவரிடமிருந்து பிரிந்து வாழும் ராஜேஸ்வரி, தனது மகனை ஷிவ் நாடார் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மதுரையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் வருகிற மார்ச் 11ம் தேதி ஷிவ் நாடார் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் இரவு மாலை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு ராஜேஸ்வரி வந்திருந்தார். அப்போது அங்கு சென்னை போலீஸார் வந்தனர்.
சென்னையைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை, ராஜேஸ்வரி ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டித் தாக்கியதாக வழக்குப் பதிவாகியுள்ளதாகவும், அதன் பேரில் ராஜேஸ்வரியைக் கைது செய்வதாகவும் கூறி அவரைக் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ராஜேஸ்வரியை சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார் நேற்று காலை அவரை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் திருமகள் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புழல் மகளிர் சிறையில் ராஜேஸ்வரி அடைக்கப்பட்டார்.