எங்களது போனும் ஒட்டுக்கேட்பு: சரத்
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகளின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுவதாக கூறியுள்ள கட்சித் தலைவர் சரத்குமார், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் சரத்குமார் கூறியுள்ளதாவது,
ஒரு ஆங்கில நாளிதழில் எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நாகராஜன், துணை பொதுச் செயலாளர் ரவீந்திரன் துரைசாமி ஆகியோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது.
ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிடுவது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். இது கடும் கண்டனத்துக்குரியது.
தீவிரவாதி மற்றும் தேச விரோதிகளைக் கண்காணிப்பதற்காக சந்தேகம் உள்ள நபர்களின் தொலைபேசிகளை போலீசார் பதிவு செய்வதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எங்களது கட்சி நிர்வாகிகளின் தொலைபேசிகளை பதிவு செய்வது, அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் செயலாகும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு போலீசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. எந்த சட்டத்தில் இதற்கு இடம் உள்ளது என்று எங்கள் கட்சி கேட்கிறது. இதற்கு 7 நாட்களுக்குள் பதில் தரவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது கடிதத்தில் சரத்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications