ஹவுரா சென்ற ரயிலில் பேட்டரி குண்டு கண்டுபிடிப்பு
சென்னை: சென்னை - ஹவுரா ரயிலில், பேட்டரி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இயக்கப்படும் ரயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் நேற்று காலை வழக்கம் போல கிளம்பியது. கும்மிடிப்பூண்டி அருகே ரயில் வந்தபோது குளிர்சாதன வசதியில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.
குளிர்சாதன பெட்டியில் உள்ள வயர்களை ரயில்வே ஊழியர்கள் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் எஸ்-2 பெட்டியில், ஒரு பயணி தனது இருக்கைக்கு கீழ் வயர் செல்வதைப் பார்த்து அதை எடுத்துள்ளார். அதில் செல்போன் பேட்டரியைப் போன்ற அமைப்பில், சில வயர்கள் இணைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து அதை எடுத்து எளாவூர் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரிடம் கொடுத்தார். பின்னர் ரயில் கிளம்பியதும் அவர் ரயிலில் ஏறிச் சென்று விட்டார்.
அதேசமயம், சென்டிரல் ரயில் நிலையத்தைத் தொடர்பு கொண்ட அவர் தான் கண்டுபிடித்துக் கொடுத்த பேட்டரி குறித்து கூறி உஷார்படுத்தினார். இதையடுத்து சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில்வே போலீஸாரும், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களும் விரைந்து வந்தனர்.
ரயில் பயணி கொடுத்த பொருளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அது வெடிக்கும் தன்மை கொண்டது எனத் தெரிய வந்தது. இதை வைத்து வெடிகுண்டை உருவாக்கலாம் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அந்த பேட்டரி குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். பின்னர் அது தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
இதையடுத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி முழுமையாக சோதனையிட உத்தரவிட்டப்பட்டது. அப்போது ரயில் விஜயவாடா அருகே போய்க் கொண்டிருந்தது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு முழுமையாக சோதனையிடப்பட்டது.
பேட்டரி குண்டை எடுத்துக் கொடுத்த பயணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவரது பெயர் விஜயக்குமார், என்ஜீனியர் என்பது தெரிய வந்தது. பின்னர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.