திமுகவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை - காங்.
டெல்லி: விடுதலைப் புலிகள் தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸுக்கு எந்த கருத்து மோதலும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வருகின்றனர்.
மேலும், நாகர்கோவிலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரது பேச்சுக்களுக்கு முதல்வர் கருணாநிதி அதிருப்தியும், வேதனையும் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு எதிராக சதி நடப்பதாகவும், வேண்டுமென்றால் ஆட்சி மாற்றத்துக்கு தான் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால் திமுக, காங்கிரஸ் இடையே மோதல் வலுக்கும் சூழ்நிலை எழுந்தது. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, முதல்வர் கருணாநிதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியத் தலைவர், மதிப்புக்குரிய தலைவர்.
கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கிடையே, எந்தவிதமான கருத்து மோதலோ, இடைவெளியோ இல்லை. கற்பனையில் கூட இல்லை.
பிரச்சினைகள் எழுந்தாலும் கூட அது உரிய முறையில் தலைவர்கள் மட்டத்தில் தீர்த்துக் கொள்ளப்படும். எனவே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் சிங்வி.