மதுரை அருகே திமுக பிரமுகர் படுகொலை - போலீஸ் குவிப்பு
மதுரை: மதுரை அருகே திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், கள்ளந்திரியை அடுத்துள்ள பாதமுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் முருகன் (24). இவர் திமுக பிரமுகர்.
இவரது வீட்டிற்கு நேற்று நள்ளிரவு வந்த கும்பல் ஒன்று அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
முருகன் இறந்ததை உறுதி செய்த பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை நள்ளிரவு வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே முருகன் இறந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் முருகன் கொலை செய்யப்பட்டது குறித்து ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், இன்று காலை மதுரையில் இருந்து அழகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த 3 அரசு நகரப் பேருந்துகளை சிறை பிடித்தனர்.
முருகனை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்தால் தான் பேருந்தை விடுவிப்போம் எனக் கூறியதால் பெரும் பதட்டம் நீடித்தது. இதனால் பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டனர்.
பேருந்து சிறைபிடிக்கப்பட்டது தெரிந்து மாவட்ட புறநகர் எஸ்பி அன்பு தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம், கிராம மக்கள் மீனாட்சிபுரம் பஞ்சாயத்துத் தலைவர் கார்மேகம் தூண்டுதலின் பேரில் தான் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக தெரிவித்தனர்.
இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட முருகன் ஒரு பிரிவை சேர்ந்ததால், அவருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இருந்த வந்த முன்விரோதத்தால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
முருகனை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். மீனாட்சிபுரம் பஞ்சாயத்துத் தலைவர் கார்மேகம் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருவதால் பேருந்துகள் விடப்படவில்லை.












Click it and Unblock the Notifications