கொள்ளை கும்பலை சுற்றி வளைத்த பொது மக்கள்
வள்ளியூர்: ராதாபுரம் அருகே பண்ணை வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்த கும்பலை பொதுமக்கள் வேனுடன் சுற்றி வளைத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள தியாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் தனது மனைவி சந்திராவுடன் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வேனில் வந்த சிலர் காரில் ரேடியேட்டருக்கு ஊற்ற தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளனர்.
அவர் வீட்டின் கதவை திறக்காமலேயே வெளியே உள்ள தொட்டியில் இருக்கும் தண்ணீரை எடுதது செல்லுமாறு கூறினார்.
பின்னர் அதே கும்பல் மீண்டும் வந்து காரில பெட்ரோல் தீர்ந்து விட்டது. அதனால் பெட்ரோல் வாங்க ஒரு கேன் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
தொடர்ந்து 2 நாட்கள் தொடர்ந்து இவர்கள் வருவதில் சந்தேகமடைந்த முத்துபாண்டியன் ராதாபுரத்தில் உள்ள தனது மகன் அரவிந்தனுக்கு போன் மூலம தகவல் தெரிவித்தார். உடனே அவரது மகன் தனது நண்பர்கள் சிலருடன் அங்கு வந்தார்.
வீட்டிற்கு சிறிது தொலைவில் நின்ற மாருதி வேனில் இருந்தவர்களிடம் அரவிந்தன் விசாரணை நடத்தியதில், முக்கூடல் ஹரிராம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணபதி, அதே ஊரை சேர்ந்த அய்யாதுரை மகன் அருள், செல்லப்பா மகன் ராகேஷ், மற்றும் சேரன்மகாதேவியை சேர்ந்த அழகன் மகன் பொன்னுவேல், திம்மராஜபுரத்தை சேர்ந்த சங்கர் என்பதும் மாருதி வேனில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதும் தெரிய வந்தது.
இதில் சந்தேகமடைந்த அரவிந்தனும், அவரது நண்பர்களும் அவர்களை பிடித்து ராதாபுரம் போலீசில் ஒப்படைப்பதற்காக பைக்கில் ஓருவரையும், மற்ற 3 பேரை பஸ்சிலும் கூட்டி சென்றனர். அவர்கள் பஸ்ஸை விட்டு இறங்கியதும் தப்பி ஓட முயன்றனர்.
அப்போது ராதாபுரத்தில் நின்றிருந்த தனியார் காற்றாலை செக்யூரிட்டிகள் சிலர் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் சங்கர் என்பவர் மட்டும் தப்பியோடி விட்டார். மற்ற அனைவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.